×

ரூ.20 கோடி நில மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மனு: போலீஸ் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சோழிங்கநல்லூரில் ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்குமாறு காவல்துறை மற்றும் சார் பதிவாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோழிங்கநல்லூர் அருகே 8 கிரவுண்ட் நிலத்தை 1981ம் ஆண்டு ராஜீவ் பர்மா, சஞ்சீவ் பர்மா உள்ளிட்ட 4 பேர் வாங்கியுள்ளனர். கொல்கத்தாவில் வசித்து வந்த அவர்கள், நிலத்தின் வில்லங்க சான்றை பார்த்த போது, அந்த நிலத்தை காஞ்சிபுரத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் சட்ட விரோதமாக போலி ஆவணங்கள் மூலம் தனது மகன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்தது.

பின்னர், இந்த நிலத்தின் பத்திரத்தை வைத்து வெவ்வேறு வங்கிகளில் ரூ.10 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக ராஜீவ் பர்மா, சஞ்சீவ் பர்மா ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் கன்னியப்பன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், மோசடிக்கு துணை போன அதிகாரிகளை வழக்கில் சேர்க்கவில்லை என்பதாலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ராஜீவ் பர்மா, சஞ்சீவ் பர்மா உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிவாசகம், மனுதாரர்களின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்ததுடன், வங்கிகளையும் ஏமாற்றியுள்ளனர். ஆவணங்களை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் துணையோடு அகற்றி விட்டார்கள். இந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளை வழக்கில் சேர்க்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழககை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறை மற்றும் குற்றம் சட்டப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post ரூ.20 கோடி நில மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மனு: போலீஸ் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBCID ,IC ,Chennai ,Chozhinganallur ,ICourt ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...