×

திராவிட மாடல் வந்ததால் சனாதனம் காலாவதி ஆகிவிட்டது இனி காலாவதி ஆக வேண்டியது கவர்னர் பதவிதான்: ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

சென்னை: திராவிட மாடல் வந்த காரணத்தினால் சனாதனம் காலாவதி ஆகிவிட்டது. இனி காலாவதி ஆக வேண்டியது கவர்னர் பதவி தான் என தமிழ்நாடு ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் நேற்று அமைச்சர் பொன்முடி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் உயர்கல்வி வளர்ந்தது. புதுமைப்பெண் திட்டம் வந்த பின்னர் உயர்கல்வி சேர்க்கையில் 29 சதவிகிதம் பெண்களின் சேர்க்கை அதிகரித்துவிட்டது. இந்தியாவின் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 18 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. சென்னை பல்கலைக்கழகம் 10வது இடத்திலிருந்து நூறாவது இடத்திற்கு சென்று விட்டதாக ஆளுநர் தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம் உலக அளவில் 547 வது இடத்திலும் இந்திய அளவில் 12 வது இடத்திலும் உள்ளது. அதேபோல் மாநில கல்லூரி இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ளது. திராவிட மாடல் ஆட்சி நடக்கிற இந்த காலகட்டத்தில் தான் கல்வித்துறை மிகச் சிறப்பாக வளர்ச்சி பெற்று உள்ளது. தமிழக ஆளுநர் கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின்போது தமிழகத்தில் கல்வி தரம் மிகச் சிறப்பாக இருக்கிறது என பேசிவிட்டு. இப்போது மாற்றிப் பேசுவது அரசியலுக்காக இப்படி பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆளுநர் உண்மையான தரவுகளை தேடி அறிந்து கொள்ள வேண்டும் பிறகு ஏதேனும் தவறு இருந்தால் அவர் சுட்டிக் காட்டட்டும்.

நாங்கள் அரசியல் செய்யவில்லை, ஆளுநர் தான் அரசியல் செய்து வருகிறார். யு.பி.எஸ்.சி படிக்கக்கூடிய மாணவர்களை அழைத்து வைத்துக்கொண்டு அவர்களிடம் சனாதனம் பற்றி பேசி வருகிறார். ஆளுநராக இருப்பவர் இதுபோன்ற அரசியல் பேசுவது தவறான ஒன்று. ஆளுநர் ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. ஒன்றிய அரசினுடைய பிரதிநிதியாக அவர் செயல்பட்டு வருகிறார். ஆனால் அவர் அப்படி செயல்படக் கூடாது. மாநில அரசு என்ன சொல்கிறதோ அதற்கு ஒத்துப்பட்டு செயல்பட வேண்டியது தான் ஆளுநரின் கடமையாக இருக்க வேண்டும்.

சனாதனம் என்பதுதான் காலாவதி ஆன ஒன்று, திராவிடம் காலாவதி ஆகவில்லை. திராவிட மாடல் வந்த காரணத்தினால் சனாதனம் காலாவதியாகிவிட்டது. கவர்னர் பதவி தான் காலாவதி ஆக வேண்டிய ஒன்று. தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிடம் இன்று அகில இந்திய அளவில் பரவ தொடங்கி இருக்கிறது. திராவிடம் என்பது சமூக நீதிக்காக மனித நேயத்திற்காக மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. திராவிடம் என்பது யாரையும் எதிர்த்து உருவாக்கப்பட்ட கொள்கை அல்ல. திராவிட இயக்கம் பற்றி நான் எழுதிய புத்தகத்தை கவர்னருக்கு அனுப்பலாம் என்று திட்டமிட்டுள்ளேன். உலகம் முழுவதும் உள்ள சமூக நீதி இயக்கங்களுக்கு வழிகாட்டியாக திராவிட இயக்கம் திகழ்ந்து வருகிறது.

The post திராவிட மாடல் வந்ததால் சனாதனம் காலாவதி ஆகிவிட்டது இனி காலாவதி ஆக வேண்டியது கவர்னர் பதவிதான்: ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Sanathanam ,Minister ,Ponmudi ,CHENNAI ,Sanatanam ,Governor ,
× RELATED ஜாமீன் பெற கால அவகாசம் கேட்டு அமைச்சர்...