சென்னை: 2009ம் ஆண்டில் துரைப்பாக்கத்தில் உள்ள ஜெயின்ஸ் பெபிள் புரூக் நிறுவனம் முதல் அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது. அந்த முதல் கட்டிடத்தில் 412 குடியிருப்புகளும், 2வது கட்டிடத்தில் 396 குடியிருப்புகளும் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது. ஆனால், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டபோது 620 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனால் கூடுதல் கழிவுநீர் மற்றும் திடக்கழிவு அதிகரித்தது.
இந்த பிரச்னையை கருத்தில் கொண்டு, அந்த குடியிருப்பை வாங்க இருந்த ஒருவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகினார். இதை தொடர்ந்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், இந்த கட்டிடத்தில் உள்ள சிக்கல்களை சரிபார்க்கும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2018ம் ஆண்டில் அதிகாரிகள் ஜெயின் ஹவுசிங் நிறுவன முழு திட்டத்திற்கும் ஒப்புதலையும், திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை பெறவில்லை என்பதையும் கண்டறிந்தனர்.
பின்னர் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு சுற்றுச்சூழல் சட்ட விதிகளை மீறவில்லை என அந்நிறுவனம் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய சேதங்களுக்கு நிறுவனத்திடமிருந்து இழப்பீடாக ரூ.2.19 கோடியை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜெயின் ஹவுசிங் நிறுவனம் இந்த அபராதத்தை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. அனுமதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு அதிகமாக 208 கூடுதல் குடியிருப்புகள் கட்டப்பட்டதால் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் விதித்த ரூ.2.19 கோடி அபராதத்தை ஜெயின் ஹவுசிங் நிறுவனம் செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.
The post ஜெயின் ஹவுசிங் நிறுவனத்துக்கு ரூ.2.19 கோடி அபராதம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.