×

‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் வெளியீடு திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் இன்று வெளியாகிறது. இதையடுத்து எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க திரைப்படம் வெளியிடப்படும் அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் இன்று மாநிலம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தை வெளியிட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனால் திரைப்படம் வெளியிடும் போது அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த திரைப்படத்திற்கு எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கொண்ட சுவரொட்டிகள் ஒட்டலாம். திரைப்படத்தை பற்றி பலவிதமான கருத்துகளை வெளியிடலாம். குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் மூலம் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தியும், சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்க வலியுறுத்தியும், திரையரங்குகள் முன்பு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தலாம். எனவே போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

* இந்த திரைப்படம் திரையிடும் அனைத்து திரையரங்குகளிலும் போதுமான காவலர்களை நிலை நிறுத்தி சரியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

* திரையரங்கிற்கு வரும் பொதுமக்களை பாதுகாப்பு சாதனங்கள் மூலம் சோதனை செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும். பெண்களுக்கு பெண் காவலர்கள் மூலம் சோதனை செய்ய வேண்டும்.

* சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் எதிர்பார்க்கப்படும் முக்கிய இடங்களில், முறையான பாதுகாப்பை உபகரணங்களுடன் காவலர்கள் நிறுத்தப்பட வேண்டும்.

* போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும்.

* சமூக வலைத்தளங்களில் இந்த திரைப்படத்திற்கு எதிரான ஆட்சேபனைக்குரிய மற்றும் எரிச்சலூட்டும் கருத்துகளை பதிவு செய்வோர்களை கண்காணிக்க வேண்டும்.

* பொது இடங்களில் சட்டம்- ஒழுங்கை பாதிக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் வெளியீடு திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Sailendrababu ,Chennai ,DGP Sailendrababu ,Dinakaran ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...