×

தமிழ்நாடு முழுவதும் ரூ.1,046 கோடி மோசடி விவகாரம் ஹிஜாவ் நிதி நிறுவன மேலாண் இயக்குநர் உள்பட 15 பேர் தேடப்படும் குற்றவாளிகள்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 14,126 பேரிடம் ரூ.1046 கோடி மோசடி வழக்கில் ஹிஜாவ் நிதி நிறுவன மேலாண் இயக்குநர் உள்பட 15 பேரை தேடப்படும் குற்றவாளியாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு ‘ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் மேலாண் இயக்குநர்களாக அலெக்சாண்டர் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி அலெக்சாண்டர் உள்ளனர்.

இவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு 15 சதவீதம் வட்டி தருவாக விளம்பரம் செய்துள்ளனர். அதன்படி முதலில் முதலீடு செய்த நபர்களின் பணத்தை வைத்து அவர்களுக்கே ஒவ்வொரு மாதமும் 15 சதவீத வட்டி கொடுத்துள்ளனர். பிறகு வசூலித்த பணத்துடன் நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்படி, இந்த வழக்கில் இதுவரை குருமணிகண்டன், முகமது ஷெரிப், சாந்தி பாலமுருகன், கல்யாணி, சுஜாதா பாலாஜி, பாரதி ரவிச்சந்திரன், அவரது மனைவி சுஜாதா ரவிச்சந்திரன், கலைச்செல்வி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயக்குநர்களான சவுந்தரராஜன், சுரேஷ், செல்வம், சந்திரசேகர் பிரிசிட்லா, கவுசல்யா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த மோசடி தொடர்பாக ஹிஜாவ் நிதி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அலெக்சாண்டர், இயக்குநர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 47 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.3.34 லட்சம் ரொக்கம், ரூ.25 லட்சம் மதிப்பு 448 கிராம் தங்கம், ரூ.75 ஆயிரம் மதிப்பு 1 கிலோ வெள்ளி, 80 லட்சம் மதிப்பு 8 கார்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், நிறுவனத்தின் 162 வங்கி கணக்குகளில் ரூ. 14.47 கோடி முடக்கப்பட்டது. குற்றவாளிகளின் 75.6 கோடி மதிப்பு அசையா சொத்துகள், 90 கோடி மதிப்பு அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி, தமிழ்நாடு முழுவதும் 19 துணை நிறுவனங்களை தவிர, ஹிஜாவ் நிதி நிறுவனத்தில் மட்டும் 14,126 பேர் மொத்தம் ரூ. 1046 கோடி முதலீடு செய்தது தெரியவந்தது. இந்த மோசடி வழக்கில் நிறுவன மேலாண் இயக்குநர் அலெக்சாண்டர், அவரது மனைவி இயக்குநர் மகாலட்சுமி ஆகியோருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் இனியா, சுஜாதா காந்தா மீதும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஜாவ் நிதி நிறுவன மேலாண் இயக்குநர்கள் அலெக்சாண்டர், அவரது மனைவி மகாலட்சுமி, இயக்குநர்களான இனியா, கோவிந்த ராஜீலு, சுஜாதா காந்தா, ரமேஷ், சுரேந்திரகுமார், முத்துகுமரன், முரளிதரன், சாமிசேகர் (எ) காலேப் சேகர், ராம்ராஜ், ஜெயக்குமார், ஜெயசஞ்சுலு, துரைராஜ், ப்ரீஜா ஆகிய 15 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உறுதியான துப்பு கொடுக்கும் நபருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். அவர்களின் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், தகவல் அளிக்க விரும்புவோர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், காவலர் பயிற்சி கல்லூரி, அசோக் நகர், சென்னை-83. தொலைபேசி எண்:400-22504311 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

* மின்னஞ்சலில் புகார் தரலாம்
ஹிஜாவ் நிதி நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்டு இதுவரை புகார் அளிக்காத முதலீட்டாளர்கள் வழக்கில் விசாரணை அதிகாரியிடம் adspeowhijau@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 044-22504332 என்ற தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் ரூ.1,046 கோடி மோசடி விவகாரம் ஹிஜாவ் நிதி நிறுவன மேலாண் இயக்குநர் உள்பட 15 பேர் தேடப்படும் குற்றவாளிகள்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Hizhao Finance Institute ,Chennai ,Hizhao Financial Institutions Mellon ,Hijao Financial Institutions Management ,
× RELATED தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக...