×

ரூ.1000 கோடி செலவிட திட்டம் வடசென்னை வளர்ச்சி பணிகள் 3 மாதங்களில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ‘‘ரூ.1000 கோடி செலவில் வடசென்னையை மேம்படுத்தும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் 3 மாதங்களில் தொடங்கப்படும்’’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் 2023-24ம் ஆண்டில் நிறைவேற்றப்படும் பல திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. இதில், சேத்துப்பட்டு மற்றும் புரசைவாக்கம் கான்ரான் ஸ்மித் சாலையில் உள்ள சலவைக் கூடம், வியாசர்பாடியில் உள்ள கன்னிகாபுரம் விளையாட்டுத் திடல் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பாகவும், பிராட்வே பிஆர்என் கார்டன் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளையும் அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், சேத்துப்பட்டு சலவைக் கூடத்தை 10 கோடி ரூபாய் செலவிலும், கன்னிகாபுரம் விளையாட்டுத் திடல், கான்ரான் ஸ்மித் சாலை சலவைக் கூடத்தை தலா 5 கோடி ரூபாய் செலவிலும் மேம்படுத்த அறிவிப்பு வெளியானது. இதில் சற்று கூடுதல் பணிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு கூடுதல் செலவு இருந்தாலும் அதையும் தருவதற்கு துறையின் செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளார். பி.ஆர்.என். கார்டன் பகுதியில் அமைந்துள்ள சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 146 குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் இருக்கிறது.

அந்தப் பகுதி மக்களும், வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 86 குடியிருப்புகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை நேரடியாகச் சென்று ஆய்வு செய்து இருக்கிறோம். கூடிய விரைவில் அந்த பகுதி மக்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து, வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகளைக் கட்டித் தர திட்டம் வகுத்துள்ளோம். வடசென்னை மேம்பாட்டிற்கு 1000 கோடி ரூபாய் 3 ஆண்டுகளில் செலவிடப்படும் என முதலமைச்சர் அறிவித்தபடி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்துள்ளோம். எங்கள் திட்டப்படி 3 அல்லது 4 மாதங்களில் இந்த பணிகள் தொடங்கும். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே இத்தகைய பணிகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

The post ரூ.1000 கோடி செலவிட திட்டம் வடசென்னை வளர்ச்சி பணிகள் 3 மாதங்களில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Vadasennai ,Minister ,Sekarbabu ,Chennai ,Vadachennai ,Seagarabu ,Dinakaran ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...