×

ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி செயற்பொறியாளர், இளநிலை உதவியாளர் கைது: குறளகம் பதிவுத்துறையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி

துரைப்பாக்கம்: பாரிமுனை குறளகம் வளாகத்தில் ஐஜி பதிவுத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் உதவி செயற்பொறியாளர் பதிவுத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் ஆவணங்களை சரிபார்த்து ஒப்புதல் கொடுக்க வேண்டியது ரமேஷின் ெபாறுப்பு. அவருக்கு உதவியாக, விஜயகுமார் என்பவர் இளநிலை உதவியாளர் பணியில் உள்ளார்.

இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவர், தனது வாடிக்கையாளர்களின் ஆவணங்களை தயார் செய்து ஆவணப்படுத்தியுள்ளார். இதை கூடுவாஞ்சேரி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து மேல் நடவடிக்கைக்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து குறளகம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு களப்பணி ஆய்வுக்காக 11 ஆவணங்களை அனுப்பியுள்ளனர். இந்த ஆவணங்களின் களப்பணி ஆய்வின் அனுமதி குறித்து உதவி செயற்பொறியாளர் ரமேஷ், இளநிலை உதவியாளர் விஜயகுமார் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அதற்கு ரமேஷ் மற்றும் விஜயகுமார் 11 கிரய ஆவணங்களின் ஒரு ஆவணத்திற்கு பற்றாக்குறை முத்திரை தீர்வை உள்ளதால் அதனை தவிர்த்து மீதமுள்ள 10 ஆவணங்களுக்கு களப்பணியாற்றி அனுமதி வழங்க ஒரு ஆவணத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம் கேட்டுள்ளனர். பின்னர் ரூ.2,500 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான புகார்தாரர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் இளநிலை உதவியாளர் விஜயகுமார் இருவரையும் தங்களது அலுவலகத்தில் வைத்து லஞ்ச பணமாக ரூ.25 ஆயிரத்தை வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

The post ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி செயற்பொறியாளர், இளநிலை உதவியாளர் கைது: குறளகம் பதிவுத்துறையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kuralakam ,Duraipakkam ,Executive ,Engineer Registration Office ,IG Registration Department ,Barimuna Kuralakam Campus ,Kuralakam Registration Department ,Dinakaran ,
× RELATED சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல்...