×

சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கு விருத்தாசலத்தில் தனியார் பள்ளிக்கு சீல் வைப்பு

வேப்பூர், மே 3‌: சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விருத்தாசலத்தில் தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடந்த மாதம் 11ம் தேதி தனியார் மழலையர் தொடக்க பள்ளியில் பயின்று வந்த 5 வயது சிறுமி, பள்ளி தாளாளரால் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டார். இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளரும், விருத்தாசலம் நகராட்சி கவுன்சிலருமான விருத்தாசலம் நந்தனார் தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் பக்கிரிசாமி (63) மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவரது கொடுஞ்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் எஸ்பி ராஜாராம் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பாலசுப்ரமணியம், அவரை ஓராண்டு காலம் குண்டர்‌ தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதன் பேரில் பக்கிரிசாமி ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த், விருத்தாசலத்தில் சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் உத்தரவின் படி மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் பள்ளியின் கதவை இழுத்து மூடி அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைத்தனர்.

இதை தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் கூறுகையில், கடந்த 2014ம் ஆண்டோடு இந்த பள்ளிக்கான உரிமம் முடிவடைந்துள்ளது. இந்த பள்ளியில் பயின்று வந்த 101 மாணவர்களும் அவரவர் விருப்பப்பட்ட பள்ளியில் மாறுதல் செய்ய மாவட்ட கல்வி அலுவலர் மூலம் மாற்றுச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் உள்ள முக்கிய ஆதாரங்கள், ஆவணங்களை பாதுகாக்கும் விதமாக மாவட்ட ஆட்சியரின் வரம்புக்குட்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டள்ளது, என்றார்.

மேலும் சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களை சந்தித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை ஆணைய தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும், என்றார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், கோட்டாட்சியர் லூர்து சாமி, மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் காவ்யா, தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

The post சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கு விருத்தாசலத்தில் தனியார் பள்ளிக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Viruthachalam ,Veypur ,Vridthachalam ,Cuddalore ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...