போபால்: மத்திய பிரதேசத்தில் பெல் நிறுவன ஊழியர் ஒருவர் தான் ஓய்வுபெற்ற கடைசி நாளில் மக்களுக்கு 3,700 கிலோவில் கிச்சடி தயாரித்து விருந்தளித்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் கடந்த 37 ஆண்டுகளாக பணியாற்றிய ரமேஷ் குமார் மகாஜன் என்பவர் தற்போது ஓய்வு பெற்றார். அவர் தன்னுடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு தனது பணியின் கடைசி நாளில் சிறப்பான விருந்து வைக்க திட்டமிட்டார். இதற்காக 3,700 கிலோ கிச்சடி தயாரித்து அனைவருக்கும் விருந்து கொடுப்பதாக தனது நண்பர்களிடம் சபதம் செய்திருந்தார்.
அதன்படி அந்த வாக்குறுதியை நிறைவேற்றிய ரமேஷ் குமார் மகாஜன், 3,700 கிலோ கிச்சடி தயாரித்து விருந்து அளித்தது மட்டுமின்றி தனது சாதனையை உலக கின்னஸ் பட்டியலுக்கும் அனுப்பி உள்ளார். இதுபோன்று ஒரே நேரத்தில் இந்தளவிற்கு கிச்சடி தயாரித்து வழங்கப்படவில்லை. அதனால் தற்போது கிச்சிடி தயாரிப்பு வீடியோக்கள் கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து ரமேஷின் மனைவி கூறுகையில், ‘3,700 கிலோ கிச்சடி தயாரிக்க இரண்டு டன் எடை கொண்ட இரும்பு பாத்திரம் பயன்படுத்தப்பட்டது. கிச்சடியில் 380 கிலோ காய்கறிகள், 350 கிலோ அரிசி, 60 கிலோ பருப்பு ஆகியவை சேர்க்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வயிறு நிறைய கிச்சடி உணவை பரிமாறினோம்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
The post ஓய்வுபெற்ற நாளில் பெல் நிறுவன ஊழியரின் தாராளம்; 3,700 கிலோ ‘கமகம’ கிச்சடி விருந்து: உலக கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை appeared first on Dinakaran.