×

மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியான வழக்கில் விவசாயி மீது வழக்குப்பதிவு

 

காரமடை: காரமடை அருகே உள்ள மேல்பாவியை சேர்ந்தவர் குப்புசாமி (50). இவர் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் வாழை,தென்னை பயிரிட்டுள்ளார்.நேற்று முன்தினம் மாலை இவரது தோட்டத்திற்கு காளியூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (34) என்பவர் தனது நண்பர்களுடன் டூவீலரில் சென்றார். பின்னர்,வீடு திரும்புகையில் தோட்டத்திற்கு போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டாட்சியர் சந்திரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் சடலத்தை எடுக்க விடாமல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மேட்டுப்பாளையம் எம்எல்ஏ செல்வராஜ் உயிரிழந்த ஜெயக்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பலியானவருக்கு நிவாரணம், விவசாயி மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன் பின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜாக்கிரதையாக மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதனையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த விவசாயி குப்புசாமி தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியான வழக்கில் விவசாயி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Karamadda ,Kuppusamy ,Melbavi ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது மினி லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு