×

வேலூரில் தொடரும் சம்பவங்களால் பரபரப்பு; பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 சிறார்கள் நள்ளிரவில் தப்பி ஓட்டம்: அதிகாலையில் 2 பேரை மடக்கி பிடித்த போலீசார்

வேலூர்: வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 பேர் நள்ளிரவில் தப்பி ஓடினர். சில மணி நேரங்களில் அவர்களில் 2 பேரை போலீசார் மடக்கிபிடித்தனர். 5 பேரை தேடி வருகின்றனர். வேலூர் காகிதப்பட்டறையில் அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் 42 சிறார்கள் உள்ளனர். இங்கிருந்தவர்களில் 6 பேர், கடந்த மார்ச் 27ம் தேதி பாதுகாவலரை தாக்கி விட்டு தப்பினர். மறுநாள் பாதுகாப்பு இல்ல ‘ஏ’ பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 12 பேர் ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய ஒருவரை தவிர மற்ற 4 பேரை தனிப்படையினர் பிடித்தனர். ஒருவன் சேலம் இளஞ்சிறார் நீதிக்குழுமம் முன்பு சரணடைந்தான்.

இச்சம்பவத்தை தொடர்ந்து கடந்த 13ம் தேதி இரவும் 5 பேர் தப்பி சென்றனர். தகவலறிந்து வேலூர் வடக்கு மற்றும் சத்துவாச்சாரி போலீசார் விரைந்து வந்து, கலெக்டர் அலுவலகம் எதிரே 5 பேரை மடக்கி பிடித்தனர். மறுநாள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்த 7 பேர் திடீரென கட்டிடத்தின் மேற்பகுதியில் ஏறி கற்களை வீசியும், துணிகளை எரித்தும் ரகளையில் ஈடுபட்டனர். அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பாதுகாப்பு இல்லத்தில் இருந்தும் சிறார்கள் தப்பி சென்ற சம்பவம் நடந்தது. இந்த சம்பவங்களை தொடர்ந்து தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையர், இங்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனும் வேலூருக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் வேலூர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 பேர் அங்குள்ள குளியலறை ஜாலியை உடைத்து எடுத்துவிட்டு அதன் வழியாக கீழே இறங்கி தப்பி சென்றுள்ளனர். இவர்கள் சென்னை, சேலம், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த சிறார் குற்றவாளிகள். இதுபற்றி பாதுகாப்பு இல்ல பொறுப்பாளர் விஜயகுமார், வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்து வந்து தேடினர். பெருமுகை அருகே சாலையில் நடந்து சென்ற 2 பேர் பிடிப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு பாதுகாப்பு இல்லத்தை சுற்றிலும் தற்போது கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வேலூரில் தொடரும் சம்பவங்களால் பரபரப்பு; பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 சிறார்கள் நள்ளிரவில் தப்பி ஓட்டம்: அதிகாலையில் 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Vellore ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...