×

திருவையாறு அருகே ஆசிரியை வீட்டில் 15 பவுன் ரூ.70,000 கொள்ளை-பட்டப்பகலில் கைவரிசை

திருவையாறு : திருவையாறு அருகே ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருவையாறு அடுத்த மணக்கரம்பை தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் பாலகுமார் (49) கேபிள் ஆபரேட்டர். இவரது மனைவி உதயா (37) திருவையாறு அடுத்த திருப்பழனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் உறவினர்கள் வீட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஆசிரியை உதயா பள்ளிக்கு சென்று விட்டார். பாலகுமார் வேலை சம்பந்தமாக திருவாலம்பொழில் சென்று விட்டார். நேற்று மாலை உதயா பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கொல்லைபுற கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கம், 15 பவுன் நகைகள், வௌ்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நடுக்காவேரி போலீசில் பாலகுமார் புகார் செய்தார். திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன், நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், அசோக், பாலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர் கார்த்திகேயன், போலீஸ் மோப்பநாய் டாபி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருவையாறு அருகே ஆசிரியை வீட்டில் 15 பவுன் ரூ.70,000 கொள்ளை-பட்டப்பகலில் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Thiruvayaru ,Tiruvayaru ,Thiruvaiyaru ,
× RELATED திருவையாறு சத்குரு தியாகராஜர்...