கரூர், ஏப். 28: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் சாலையை விரிவாக்கம் செய்து, தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
கரூரில் இருந்து ராயனூர், பொன்நகர், திருச்சி பைபாஸ் சாலை, திண்டுக்கல், மதுரை பைபாஸ் சாலை சந்திப்பு, பாகநத்தம், ஈசநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராயனுர் வழியாக செல்கிறது. இந்த சாலையில், தில்லைநகர் பகுதியில் இருந்து பொன்நகர் வரை சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள், இலங்கை தமிழர் முகாம் போன்றவை உள்ளது.
மேலும், சாலையோரம் அதிகளவு கடைகளும் செயல்படுகிறது. இதே சாலையில் டாஸ்மாக் கடையும் செயல்படுகிறது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பஸ்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையேதான் இந்த பகுதியை கடந்து செல்லும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் வகையில், ராயனூர் சாலையை விரிவாக்கம் செய்து, தடுப்புச் சுவர் அமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிச் சாலையை ஆய்வு மேற்கொண்டு, அதற்கான பணிகளை மேற்கொள்ளும்பட்சத்தில் விபத்துக்கள், விபத்து குறைவதோடு, எளிதான போக்குவரத்தும் நடைபெறும் எனக் கூறப்படுவதால், விரைந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ராயனூர் சாலையை விரிவாக்கம் செய்து தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.