×

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு: இல்லத்தில் வசிப்போர் கண்ணீருடன் நன்றி கூறினர்

சென்னை: செங்கல்பட்டில் உள்ள பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், பரனூரில் தொழுநோயாளர்களுக்கான மறுவாழ்வு இல்லம் 1971ம் ஆண்டு கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரசு மறுவாழ்வு இல்லத்தில் தற்போது 61 ஆண்கள் மற்றும் 58 பெண்கள், என மொத்தம் 119 பேர் உள்ளனர். “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களை ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் செல்லும் வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பரனூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், முதல்வர் இந்த இல்லத்தில் உள்ளவர்களிடம் அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், இல்ல வாசிகளுக்கு போர்வைகள் மற்றும் உடைகளை வழங்கினார். பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருவதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இல்லவாசிகள், உணவு செலவினத்தை 42 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தியமைக்காக தங்களது நன்றியை தெரிவித்தனர். மேலும், 5-வது வார்டில் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியினை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், குப்பை வண்டி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தனர். அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவற்றை உடனடியாக நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் மற்றும் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பின் ‘களஆய்வில் முதலமைச்சர்’ கூட்டத்துக்காக விழுப்புரம் செல்லும் வழியில், பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உதவிகளை வழங்கினேன். தலைவர் கலைஞரின் 48வது பிறந்தநாள் விழாவின்போது, பொதுமக்கள் மனமுவந்து அளித்த நிதியில் இருந்து கட்டப்பட்ட அந்த தொழுநோய் பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு இல்லம், விளிம்பு நிலை மக்களின் மீதும் அவர் கொண்டிருந்த அன்பின் வரலாற்றுச் சான்று. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு: இல்லத்தில் வசிப்போர் கண்ணீருடன் நன்றி கூறினர் appeared first on Dinakaran.

Tags : M. K. Stalin ,Paranur Government ,Rehabilitation Home ,Chengalpattu District ,Chennai ,Chief Minister ,M.K.Stal ,Baranur Government ,Chengalpattu ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...