×

திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்: மே 2ம் தேதி தேரோட்டம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர்ஸ்ரீவைத்திய வீரராகவப்பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 2ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப்பெருமாள் கோயிலில் ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். தை பிரமோற்சவத்திற்கு பிறகு சைத்ர பிரம்மோற்சவம் எனும் சித்திரை பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் ஸ்ரீவீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதன்படி இன்று விடியற்காலை 4.30 மணிக்கு கொடியேற்றமும், காலை 6 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும் நடைபெற்றது. 9.30 மணிக்கு பக்தி உலா, 10.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை 27ம்தேதி காலை ஹம்சவாகனத்தில் 5 மணிக்கு வீதி புறப்பாடும், 8 மணிக்கு பக்தி உலாவும், 9.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு சூரியபிரபை நிகழ்ச்சியும், நாளை மறுதினம் 28ம்தேதி காலை 4 மணிக்கு கருட சேவையும், கோபுர தரிசனமும், மாலை 5.30 மணிக்கு திருவீதி புறப்பாடும், 7.30 மணிக்கு ஹனுமந்த வாகனம் புறப்பாடு நிகழ்ச்சியும், 29ம்தேதி காலை 5 மணிக்கு சேஷவாகனம் பரமபதநாதன் திருக்கோலமும், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன புறப்பாடு நிகழ்ச்சியும், 30ம்தேதி காலை 4 மணிக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை 7 மணிக்கு யாளி வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மே மாதம் 1ம்தேதி காலை 5 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலமும், சூர்ணாபிஷேகமும் மாலை 5 மணிக்கு வெள்ளி சப்பரமும், இரவு 7 மணிக்கு யானை வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2ம்தேதி காலை 4.45 மணிக்கு திருத்தேருக்கு பெருமாள் எழுந்தருளுதலும், 7.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும், இரவு 9.30 மணிக்கு கோயிலுக்கு பெருமாள் எழுந்தருளுதலும் நடைபெறுகிறது.

பிறகு 3ம்தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்சனமும், 7.30 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 4ம்தேதி விடியற்காலை 4 மணிக்கு ஆள்மேல் பல்லக்கும், 10.30 மணிக்கு தீர்த்த வாரியும், இரவு 7 மணிக்கு விஜயகோடி விமான நிகழ்ச்சியும், 5ம்தேதி காலை 9 மணிக்கு த்வாதசாராதனமும், இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கும், 11.30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரமோற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

The post திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்: மே 2ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Chitrai Pramotsava Festival ,Thiruvallur Srivaithiya Veeraragava Perumal Temple ,Tiruvallur ,Chitrai Pramotsava ceremony ,Thiruvallur Srivaithiya ,Veeraragavaperumal ,Temple ,Chitrai Brahmotsava ceremony ,Veeraragava ,Perumal Temple ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...