×

சேலம் சரகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி-ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி சாம்பியன்

சேலம் : சேலம் போலீஸ் சரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில், அதிக புள்ளிகள் பெற்று சேலம் ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி சாம்பியன் கோப்பையை வென்றார். தமிழ்நாடு காவல்துறையில் மண்டலம், சரகம் வாரியாக போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாநகர போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி, சேலம் நகரமலை அடிவாரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்டது.

இதில் நேற்று காலை, சேலம் சரக போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமார், போச்சம்பள்ளி பட்டாலியன் எஸ்பி பாண்டியராஜன், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா, கெளதம் கோயல் மற்றும் கூடுதல் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், உதவி கமிஷனர்கள் என 22 அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிஸ்டல் மற்றும் ரிவால்வர் பிரிவில் நடத்தப்பட்ட போட்டியில் சேலம் ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி முதலிடத்தையும், கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி 2ம் இடத்தையும், சேலம் மாநகர கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன் 3ம் இடத்தையும் பெற்றனர். இதேபோல், இன்சாஸ் ரைபிள் பிரிவில் தர்மபுரி மாவட்டம் அரூர் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் முதலிடத்தையும், சேலம் ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி 2ம் இடத்தையும், கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி 3ம் இடத்தையும் பிடித்தனர்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சேலம் ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி வென்றார். அவருக்கு சுழற்கோப்பையை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வழங்கினார். அதேபோல், சாம்பியன் பிரிவில் 2ம் இடம் பிடித்த உதவி கமிஷனர் ஆனந்தி, 3ம் இடம் பிடித்த கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

The post சேலம் சரகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி-ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Salem Saravari ,Salem ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்