×

வாலிபர் தற்கொலை

 

ஈரோடு, ஏப். 26: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர், கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (25). திருமணமாகவில்லை. கூலி வேலை செய்து வருகிறார். பெற்றோருடன் வசித்து வந்த பிரபுவுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு, ஈரோடு, சேலம் அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் தற்போதும் பிரபுவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இந்த நிலையில், கடந்த 23ம் தேதி இரவு, பிரபுவின் தாய் சித்தாயி (65) அவரை சாப்பிடக் கூப்பிட்டுள்ளார். அதற்கு பிரபு, தனக்கு வயிறு வலிப்பதால் பின்னர் சாப்பிட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து, சித்தாயி வீட்டுக்கு வெளியில் வாசலில் படுக்கச் சென்றுவிட்டார். மீண்டும் இரவு சுமார் 11.30 மணியளவில் பிரபுவை சாப்பிட சொல்வதற்காக அவர் வீட்டுக்குள் சென்றபோது, வீட்டின் விட்டத்தில் பிரபு, சேலையால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சித்தாயி, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பிரபுவை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து, சித்தாயி நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Prabhu ,Karukampalayam ,46 Budur ,Modakurichi, Erode district ,Dinakaran ,
× RELATED விஷம் குடித்து பெண் தற்கொலை