×

நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் பழங்குடியினர் போராட்டம்: ஏப்.28-ம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு

பிரேசில்: நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் தொடங்கிய போராட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பாரம்பரிய உடையணிந்து நடனமாடி பேரணி சென்றவர்கள் நில உரிமையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மலை காடுகள், மூலிகை மரங்கள் என இயற்கையாகவே செழுமையான நாடாக திகழ்கிறது பிரேசில். அங்கு பெரும்பாலான நிலங்கள் பழங்குடி மக்களின் கட்டுப்பாட்டிலே உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் நிலத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

இதனை எதிர்த்து அந்நாட்டு பழங்குடி மக்களுக்காக செயல்பட்டு வரும் அமைப்புகள் இணைந்து 2004-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நடப்பாண்டு போராட்டம் அந்நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு நில உரிமையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். அனைவரும் அவர்களது பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து, நடனமாடி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆட்சி காலத்தில் பழங்குடியின மக்களின் நிலங்களை எண்ணெய் எடுக்கவும், சுரங்கங்கள் அமைக்கவும் பயன்படுத்த உத்தரவிட்டார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இடதுசாரி தலைவரான தற்போதைய அதிபர் லூலா டா சில்வா தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என நம்பிக்கை இருப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். ஏப்ரல் 28-ம் தேதி வரை இந்த போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து 6,000 மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் பழங்குடியினர் போராட்டம்: ஏப்.28-ம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Brazil ,Dinakaran ,
× RELATED பிரேசிலில் 80 ஆண்டுகளில் இல்லாத பெருமழை : பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு!!