விருதுநகர்: திருவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் கொலை மிரட்டல் விடுப்பதாக, அக்கட்சி மகளிரணி இணைச்செயலாளர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில், திருவில்லிபுத்தூர் நகர அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் ரீட்டா நேற்று புகார் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், அவருடைய தோழி இன்னாசியம்மாளுடன் பேசிய தொலைபேசி உரையாடலில் என்னையும், அதிமுக இயக்கத்தை சேர்ந்த சில பெண்களையும் அசிங்கமாக, ஆபாசமாக உடல் உறுப்புகள் குறித்து தவறாக பேசும் உரையாடல் வெளிவந்தது. அதுகுறித்து புகார் அளித்தேன்.
இதையறிந்த மான்ராஜ் ஆதரவாளர்கள் மானசேரி ராமையா பாண்டியன், பண்டிதன்பட்டி முனியாண்டி, இன்னாசியம்மாள் ஆகிய 3 பேரும் வீட்டிற்கு வந்து, கொலை செய்து விடுவோம், பாலியல் தொழில் வழக்கில் சிக்க வைத்து மானபங்கப்படுத்தி விடுவோம் என மிரட்டினர். காய்கறி வாங்க கடைக்கு போன போது பைக்கில் வந்த 35 முதல் 40 வயதுடைய இருவர் கேசை வாபஸ் வாங்கி விட்டு ஊரை விட்டு ஓடிவிடு, இல்லை கொலை செய்யாமல் விடமாட்டோம் என மிரட்டி சென்றனர். எஸ்பி தலையிட்டு எம்எல்ஏ தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் வராமல் இருக்கவும், தக்க தண்டனை பெற்றுத்தரவும் வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் கொலை மிரட்டல் விடுக்கிறார்: மகளிரணி இணைச்செயலாளர் புகார் appeared first on Dinakaran.