×

அடியில் தூங்கியபோது சோகம் லாரியை இயக்கியபோது சக்கரத்தில் சிக்கிய கிளீனர் உடல் நசுங்கி பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே லாரியை இயக்கியபோது சக்கரத்தில் சிக்கிய கிளீனர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். லாரியின் அடியில் தூங்கியபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரில் பொக்லைன் இந்திரங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆர்டரின் பேரில், ஜேசிபி இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் (34) என்பவர் 24 சக்கரங்கள் கொண்ட ராட்சத லாரியை மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து இயக்கி கொண்டு தமிழ்நாடுக்கு புறப்பட்டார். கிளீனராக மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரோகித் யாதவ் என்பவர் வந்தார்.

நேற்றுமுன்தினம் காலையில் இவர்களது லாரி, மேல்நல்லாத்தூருக்கு வந்தடைந்தது. அப்போது, தொழிற்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கவில்லை. அதனால் தொழிற்சாலையின் அருகிலேயே லாரியை நிறுத்திவிட்டு ராஜ்குமாரும், ரோக் யாதவும் ஓய்வு எடுத்தனர். கிளீனர் ரோகித் யாதவ், லாரிக்கு அடியில் தூங்கினார். இரவு 8 மணிக்கு பொக்லைன் இந்திரங்களை எடுத்து செல்வதற்காக தொழிற்சாலையில் இருந்து ராஜ்குமாருக்கு அழைப்பு வந்தது. உடனே லாரியை இயக்கி கொண்டு தொழிற்சாலைக்குள் செல்ல முயன்றார். அந்த நேரத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி ரோகித் யாதவ் அலறி துடித்தார்.

உடனே டிரைவர், பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார். அதற்குள், ரோகித் யாதவ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோகித்யாதவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அடியில் தூங்கியபோது சோகம் லாரியை இயக்கியபோது சக்கரத்தில் சிக்கிய கிளீனர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Sogam ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED வளைகாப்பு நிகழ்ச்சிக்காக...