- திருமலை திருப்பதி
- தேவஸ்தானம்
- திருமலா
- திருமலை-திருப்பதி தேவஸ்தானம்
- திருமலை திருப்பதி தேவஸ்தானம் திடீர் வேலை நிறுத்தம்
திருமலை: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 2000க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின் மூலம் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களை தேவஸ்தானத்துடன் இணைத்து பணியில் நியமிக்க வேண்டும். அல்லது மாநில அரசு கொண்டுவந்துள்ள ஆந்திர பிரதேஷ் பணியாளர்கள் கார்ப்பரேஷனில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் இக்கோரிக்கைகளை ஏற்காத நிலையில் நேற்று மாலை திருப்பதி அலிபிரி காவல் நிலையம் எதிரே உள்ள சீனிவாச சேது மேம்பாலம் அருகே திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறோம். எங்கள் நிலையை தேவஸ்தான அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் சம்பளத்தை உயர்த்தாமல் தற்போதுள்ள சம்பளத்தை அதிகாரிகள் குறைத்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு போன்ற இக்கட்டான காலங்களிலும் நாங்கள் பணிபுரிந்தோம். கொரோனா காலத்தில் பல தொழிலாளர்கள் இறந்துவிட்டனர். எனவே தனியார் மூலம் இனி பணி புரிய மாட்டோம். அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கான கார்பரேஷனில் அல்லது தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே செயல்படுவோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்ட அவர்கள் இன்று காலை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை யாரும் வேலைக்கு செல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டது.
The post திருமலை திருப்பதி தேவஸ்தான தூய்மை பணியாளர்கள் திடீர் ஸ்டிரைக் appeared first on Dinakaran.