×

வாழ்வை மாற்றும் புதையல் யோகம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

புதையல் என்றதும் உங்கள் மண்டைக்குள் பல்பு எரிவது இங்கே தெரிகிறது. உழைக்காமல் வரும் பொருள் நிலைக்காது என்ற சொலவடை உண்டு. இது அவரவரின் அனுபவத்தில் உணரப்படும். ஒவ்வொருவரும் உழைத்து பொருள் ஈட்டுவதற்காக படாதபாடு படுகிறோம். அப்படியே உழைத்தாலும், பெரும் பொருள் மற்றவர்களுக்கு போக மீதிதான் நமக்கு வருகிறது. இந்த புதையல் யோகம் என்பது உங்களின் உழைப்பின் முழுவதும் உங்களுக்கே வந்து சேரக்கூடிய யோகம் எனவும் சொல்லலாம் அல்லது இவ்வளவு நாள் நீங்கள் உழைத்து பொருள் ஈட்டியிருந்தாலும், ஏதும் கிடைக்காமல் இருந்தாலும் இனி பெரும் பொருள் உங்களை வந்தடைவதற்கான காலம் என்றும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். இதனை சமஸ்கிருதத்தில் `நிஷ்கல யோகம்’ எனவும் அழைப்பார்கள். சில நேரங்களில் பெரும் பணம் வந்து சேரும்போது நோய், பிரச்னை அதோடு அவர்களுக்கு தெரியாமல் கூடவே வந்து சேர்ந்துவிடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

புதையல் யோகம் என்றால் என்ன?

ஜனன ஜாதகத்தில் நான்காம் (4-ஆம்) அதிபதியும், பத்தாம் அதிபதியும் (10-ஆம்) இணைந்திருத்தல், நான்காம் (4-ஆம்) அதிபதியும் பத்தாம் அதிபதியும் (10-ஆம்) ஒன்றுக்கொன்று பார்வை பெற்றிருத்தல், நான்காம் (4-ஆம்) அதிபதியும் பத்தாம் அதிபதியும் (10-ஆம்) பரிவர்த்தனை பெற்றிருத்தல் புதையல் யோகம் எனச் சொல்லப்படும் நிஷ்கல யோகமாகும்.

புதையல் யோகத்தின் கால மாற்றங்கள்

பழங்காலத்தில் அதாவது, ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு நிலத்தை தோண்டும் போது பானைகளிலோ அல்லது தாழிகளிலோ தங்க நாணயங்களாகவோ, தங்கக் கட்டிகளாகவோ பெரும் பொருள் கிட்டியிருக்கிறது. பூமியில் இருந்து பெறப்படும் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்ற விதி இப்பொழுதும் இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன் லாட்டரி சீட்டுகளின் மூலமாகவோ அல்லது குதிரைப் பந்தயங்களின் வாயிலாக பெரும் தனம் உண்டாயிருக்கிறது. நிகழ்காலத்தில் சிலருக்கு ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் பொருள் ஈட்டுகின்றனர்.

இந்த மாதிரியான தன யோகங்கள் காலத்திற்கு தகுந்தவாறு மாறுபடுகின்றது. ஆனால், இது அனைவருக்கும் கிட்டுவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது உழைக்காமல் வருகின்ற தனத்தை சொல்கின்றது. உழைப்பால் பெறப்படும் தன யோகமே என்றும் நிலை பெறும் அமைப்பாகும். சிலர், பல தொழில் செய்து எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருப்பர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மறுபடியும் தொழில் தொடங்குவர். ஆனால், வளர்ச்சி அபரிமிதமாக ஏற்பட்டு அவர்களுக்கு பெரும் தனயோகம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தனயோகமே நிஷ்கல யோகமாகும்.

சிலருக்கு வேலையிலோ அல்லது அரசியலிலோ பெரிய பதவிகள் கிடைக்கும். இதுவும் ஒரு புதையல் யோகமாகும். இது நீடிக்கும் என்று சிலர் நினைப்பர். சில நேரங்களில் நீண்ட காலம் யோகமுடையதாகவும் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் யோகம் இல்லாததாகவும் மாறும் அமைப்பை உடையதாகும்.

லக்னத்தின் அடிப்படையில் புதையல் யோகம் அமைப்புகள்

மேஷம், துலாம் சர லக்னங்களுக்கு சந்திரன், சனி கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். ரிஷபம், விருச்சிகம் ஸ்திர லக்னங்களுக்கு சூரியன், சனி கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். மிதுனம், கன்னி, மீனம், தனுசு ஆகிய உபயலக்னங்களுக்கு வியாழன், புதன் கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். கடகம், மகரம் சர லக்னத்திற்கும் சிம்மம், கும்பம் ஸ்திர லக்னத்திற்கும் செவ்வாய், சுக்கிரன் கிரகங்கள் புதையல் யோகத்தை ஏற்படுத்தும். இந்த ஏழு கிரகங்கள் மட்டும் சாயா கிரகங்களைத் தவிர புதையல் யோகத்தை தருகின்றன. நான்காம், பத்தாம் இடம் தொடர்பு ஏற்படுவதினால் வீட்டின் நிலத்தின் மூலமாகவோ அல்லது தொழில் / உத்தியோகத்தின் மூலமாகவோ இந்த புதையல் யோகம் ஏற்படலாம்.

புதையல் யோகம் எந்த காலகட்டத்தில் ஏற்படும்?

கோட்சாரத்தில் (4-ஆம் அதிபதி, 10-ஆம் அதிபதி) நான்கு, பத்துக்குடையவர்கள் சேரும் காலத்திலும், மேலும் (4-ஆம் அதிபதி, 10-ஆம் அதிபதி) நான்கு, பத்துக்குடையவர்கள் ஒருவரையொருவர் பார்வையிடும் காலத்திலும், அல்லது (4-ஆம் அதிபதி, 10-ஆம் அதிபதி) நான்கு, பத்துக்குடையவர்கள் திசா, புத்தி காலங்களிலும் இந்த புதையல் யோகம் வேலை செய்யும் காலமாகும். இக்கால கட்டத்தில் அசுப கிரகங்கள் இணைந்து தடை ஏற்படுத்தினால் சிறிய அளவில் வேலை செய்யும். இந்த நான்காம், பத்தாம் அதிபதிகள் மறைவிடத்தில் இருந்தாலும், பெரிய அளவில் ஏற்படாது. கேந்திரங்களில் இருந்தால் சிறப்பான பலனை தரும்.

The post வாழ்வை மாற்றும் புதையல் யோகம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெண் சங்கம்