×

கொத்தனாரை கல்லால் அடித்து கொலை செய்த கணவன், மனைவி கைது

 

மதுரை, ஏப்.24: மதுரை பீ.பி.குளம் இந்திராநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மோகன்(61). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கும், மதுரை வில்லாபுரம் கனகுபிள்ளை தெருவில் உள்ள செட்டியார் காம்பவுண்டில் வசித்துவரும் வடிவேல் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை வடிவேல், தனது ஆட்டோவை, மோகன் வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்தார். இதைப்பார்த்த மோகன், தனது வீட்டுமுன் ஆட்டோவை நிறுத்தக்கூடாது எனக்கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வடிவேல், ஆட்டோவில் சென்று மோகனின் வீட்டின் மீது மோதினார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது வடிவேல் மற்றும் ஆட்டோவிலிருந்த அவரது மனைவி விஜி ஆகியோர் சேர்ந்து மோகனை, அருகில் கிடந்த சிமிண்ட் கற்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த மோகனை, உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், சம்பவம் நடந்த மோகனின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொலையான மோகனின் மனைவி சிவகாமி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, ஆட்டோ டிரைவர் வடிவேல், இவரது மனைவி விஜி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

The post கொத்தனாரை கல்லால் அடித்து கொலை செய்த கணவன், மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Mohan ,2nd Street, Indiranagar, PP Kulam, Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை