சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் குமார் (எ) கருப்பு குமார் (45). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன், அதே பகுதியில் இவர் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 6 பேர், இவரை வெட்டி கொலை செய்தனர்.
குமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க திருவொற்றியூரை சேர்ந்த ரவுடி ராஜசேகர் (42) வந்துள்ளார். அங்கு, கருப்பு குமாரின் மைத்துனர் கமல் (எ) கமலக்கண்ணனும் (35) வந்துள்ளார். இருவரும் அருகில் உள்ள பழைய கட்டிடத்தில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. போதையில் இருந்த கமலக்கண்ணன், ராஜசேகரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி, தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜசேகர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். நேற்று முன்தினம் காலை ராஜசேகர் ரத்த வெள்ளத்தி்ல கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து கொருக்குப்பேட்டை இன்ஸ்பெக்டர் யுவராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர்.
The post இறுதி சடங்கில் மோதல் தலையில் கல்லை போட்டு ரவுடி கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.