×

பெண் சடலத்துடன் உறவினர்கள் மறியல்

 

போச்சம்பள்ளி, ஏப்.22: போச்சம்பள்ளி அருகே டூவீலர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்தார். போதையில் மோதி விட்டு நிற்காமல் சென்றவரை கைது செய்யக்கோரி, சடலத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கொடமாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி ரஞ்சிதம்(40). மூர்த்தி இறந்து விட்டதால், ரஞ்சிதம் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 16ம் தேதி இரவு, அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு, ரஞ்சிதம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டூவீலர், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சிதத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று காலை அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, ரஞ்சிதத்தின் உடல், இறுதிச்சடங்கிற்கு பின்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்து, மோதிவிட்டு நிற்காமல் சென்றவரை கைது செய்ய வலியுறுத்தி, சடலத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். கொடமாண்டப்பட்டி- போச்சம்பள்ளி சிப்காட் சாலையில் நடைபெற்ற போராட்டத்தால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், பர்கூர் டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் பிரபாவதி, முருகன், ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post பெண் சடலத்துடன் உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Bochampally ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...