ஈரோடு, ஏப்.19: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ராதாமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன், மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர்.
இதில், 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், மினி மையங்களை பிரதான மையத்துடன் இணைப்பதையும் கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மேலும் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2 அல்லது 3 மையங்களுக்கு ஒரே ஊழியர் பொறுப்பு வகிப்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். ரசீதின்படி சிலிண்டர் மற்றும் மின் கட்டணங்களை அரசே செலுத்த வேண்டும். அரசு ஊழியர்களைப் போல அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, மாநில துணைத்தலைவர் எஸ்.மணிமாலை, மாநிலக்குழு உறுப்பினர் பூங்கொடி மற்றும் திரளான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்திலேயே முதன்முறையாக சாதனை
The post அங்கன்வாடி ஊழியர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.