×

குடும்ப தகராறில் மகனை தீ வைத்து கொளுத்திய தந்தை

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (29). இவருக்கும் சத்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன் காதல் திருமணமாகி ரித்திக் ரோஷன் (5) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பெற்ற குழந்தை யாருக்கு பிறந்தது என கேட்டு சீனிவாசன், சத்யாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பயந்து போன ரித்திக் ரோஷன், அருகில் உள்ள வீட்டிற்கு ஓட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது சீனிவாசன், ரித்திக் ரோஷனை தடுத்து நிறுத்தி, அருகில் இருந்த பெட்ரோலை மகன் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர், அங்கிருந்தவர்கள் உடனடியாக ரித்திக் ரோஷனை தீக்காயங்களுடன் மீட்டனர். மேலும், இந்த சம்பவத்தின்போது சீனிவாசனுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்தில் ரித்திக் ரோஷனுக்கு முகம், 2 கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம்குறித்து சத்யா சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குடும்ப தகராறில் மகனை தீ வைத்து கொளுத்திய தந்தை appeared first on Dinakaran.

Tags : Seyyur ,Srinivasan ,Kayapakkam ,Chittamur ,Chengalpattu district ,Satya ,
× RELATED சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் லஞ்ச...