×

மாம்பாக்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் 2வது வார்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் அப்பகுதிக்கென தனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க தேவையான நிதியை மாவட்டக்குழு உறுப்பினர் காயத்ரி அன்புச்செழியன் தனது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் நிதியிலிருந்து வழங்க முன்வந்தார்.

இதைத் தொடர்ந்து சுமார் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைக்க பாரத ஸ்டேட் வங்கி குடியிருப்பு பூங்காவை ஒட்டி இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இறுதிக்கட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி தெரிவித்துள்ளார். பணிகள் முடிவடைந்ததும் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post மாம்பாக்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mambakkam Puradi ,Tirupporur ,Tirupporur Union ,Mambakkam ,Mambakkam Pavilam ,Dinakaran ,
× RELATED கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி