×

ராஜபாளையம் பகுதியில் கரும்பு விளைச்சல் அதிகம் இருந்தும் விற்பனை செய்ய முடியாத அவலம்: விவசாயிகள் வேதனை

ராஜபாளையம், ஏப். 17:ராஜபாளையம் பகுதியில் கரும்பு விளைச்சல் அதிகம் இருந்தும் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தனியார் சர்க்கரை ஆலை தரப்பில் வழங்க வேண்டிய நிலுவை தொகையை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு விவசாயிகள் கரும்பை அதிகம் பயிரிட்டு நல்ல மகசூல் பெற்று வந்தனர். இந்நிலையில் மாவட்டத்தின் அருகே நெல்லை மாவட்ட பகுதியான வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது.

பல்வேறு நிர்வாக பிரச்னைகள் காரணமாக சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கும் கரும்புகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதி ராமச்சந்திரராஜா கூறுகையில், கடந்த மூன்று வருட காலமாக தனியார் சர்க்கரை ஆலை தரப்பில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இந்திய சர்க்கரை கட்டுமான சட்டத்தின்படி ஒப்பந்தம் போட்டு கரும்பு சப்ளை செய்ததில், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் அரசின் கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு செல்லவில்லை. இதனால் கரும்பு விவசாயிகளுக்கு மூன்று வருடங்களாக பணம் கிடைக்காமல், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தற்போதும் சர்க்கரை ஆலை பிரச்னை தீர்க்கப்படாமல் விவசாயிகள் அல்லாடுகின்றனர். இந்தியாவின் குலத்தொழிலான விவசாயம் காக்கப்பட வேண்டும். அதற்கு அரசு தரப்பில் உரிய நடவடிக்ைக மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றார். மேலும், விவசாய தொழிலை நம்பி தொடர்ந்து கரும்பு பயிரிட்டு பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் நிலையில் விவசாயிகளுக்கு அதிக பண விரயம் ஏற்படுகிறது. தமிழக அரசு வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உற்பத்தியாகக்கூடிய கரும்பினை அரசு கொள்முதல் செய்து இப்பகுதியில் அரசு கரும்பு ஆலை ஒன்றை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராஜபாளையம் பகுதியில் கரும்பு விளைச்சல் அதிகம் இருந்தும் விற்பனை செய்ய முடியாத அவலம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!