திருச்சி, ஏப்.16: ராகுல்காந்தி எம்பி பதவி தகுதிநீக்கம் கண்டித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் எம்பி தலைமையில் திருச்சி ஜங்ஷன்ரயில் நிலையத்தில் ரயில்மறியல் செய்ய முயன்ற 220 பேரை போலீசார் கைது செய்தனர். அகில இந்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி, அதானி குழுமத்திற்கு விற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் மறியல் செய்வதற்காக 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில்வே ஜங்ஷன் முன் திரண்டனர். இதில் திருநாவுக்கரசர் எம்பி கருப்பு சட்டை அணிந்திருந்தார். பகல் 12 மணியளவில் ரயில்வே ஜங்ஷன் நுழைவு வாயிலில் இருந்து ரயில் மறியல் செய்வதற்காக புறப்பட்டனர். அவர்களை ரயில்நிலையம் முன்பாக போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.
இதையடுத்து திருநாவுக்கரசர் எம்பி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் 220 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். காங்கிரஸ் கட்சியினர் ரயில்மறியல் போராட்டத்தால் திருச்சி ஜங்ஷன் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
The post ராகுல்காந்தி எம்பி பதவி தகுதிநீக்கம் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.