×

மது போதையால் விபரீதம்: கூவம் ஆற்றில் இறங்கியவர் சேற்றில் சிக்கி பரிதாப பலி

சென்னை: மது போதையில் கூவம் ஆற்றில் இறங்கியவர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா நகரை சேர்ந்தவர் எடிசன் (48), கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் எடிசன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ்அதே பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் இறங்கியுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள், அவரை கரைக்கு திரும்பும்படி கூச்சலிட்டுள்ளனர். ஆனால், அதை கேட்காமல் கரையில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்ற நிலையில், எடிசன் திடீரென சேற்றில் சிக்கினார். உடனே, கரையில் இருந்த சிலர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. சிறிது நேரத்தில் எடிசன் தண்ணீரில் மூழ்கினார்.

இதுபற்றி கோட்டூர்புரம் போலீசுக்கும், கிண்டி தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், கிண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் தமிழ்பாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் சைதாப்பேட்டை, அசோக் நகர் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த வீரர்கள், ரப்பர் படகுகளில் சென்று எடிசனை தேடினர். 3 படகுகளில் 15க்கும் மேற்பட்ட வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆன நிலையில் கூவம் ஆற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் தேடும் பணியை தீயணைப்பு படையினர் கைவிட்டனர். மீண்டும், நேற்று காலையில் தேடும் பணி நடைபெற்றது.
அப்போது, எடிசன் சடலம் கிடைத்தது. அதை மீட்டு தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது எடிசனின் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்காக எடிசனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மது போதையால் விபரீதம்: கூவம் ஆற்றில் இறங்கியவர் சேற்றில் சிக்கி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Koovam river ,CHENNAI ,Saitappettai Chinnamalai ,Arogya Mata Nagari ,Dinakaran ,
× RELATED திருவேற்காட்டில் கூவம்...