×

திருத்துறைப்பூண்டியில் ரூ.20.40 கோடியில் புறவழிச்சாலை பணி விறுவிறுப்பு

திருத்துறைப்பூண்டி, ஏப். 14: திருத்துறைப்பூண்டியில் ரூ.20.40 கோடியில் புறவழிச்சாலை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பணியை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேதாரண்யம் சாலை வரை ஒரே சாலை தான். இந்த சாலையிலிருந்து தான் மன்னார்குடி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பிரிவு நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி தெரு சாலைகள் உள்ளது. நகரில் வாகன போக்குவரத்து அதிகமாக வருவதாலும். சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாலும். இந்த ஒரே சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், வர்த்தகர்கள் என் அனைதரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவரச தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட போக முடியாமல் சில நேரங்களில் சிக்கி கொள்ளும் நிலையும் இருந்து வருகிறது. இதை போக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலை வேளூர் பாலத்திலிருந்து நாகப்பட்டினம் பைபாஸ் சாலை வரை 2.6 கி.மீ. புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.7 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயத்தப் பணி தொடங்கப்பட்டது. புறவழிச்சாலை செல்லும் இடங்களில் உள்ள நிலங்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். நிலங்களுக்கான மதிப்பீடு தொகை நிர்ணயிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் பணி நின்று போய் நிதியும் திரும்பி போய்விட்டது. இந்நிலையில் மீண்டும் புறவழிச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த ரூ.4 கோடி 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய திட்ட மதிப்பீடு செய்து அனுப்பப்பட்டது.

ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிச்சலை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்க வேண்டும் என்று வர்த்தக சங்கம், அரசியல் கட்சியினர், சேவை அமைப்புகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருத்துறைப்பூண்டிக்கு பிரசாரத்திற்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்படும் என்று பேசி இருந்தார். மேலும் எம்எல்ஏ மாரிமுத்து முதல் கூட்டதொடரில் புறவழிச்சாலைப்பணிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இந்நிலையில்,புறவழிச்சாலை பணிக்கு ரூ.20.40 கோடி நிதி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. நெடுஞ்சாலைதுறைசார்பில் புறவழிச்சாலை பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் துவங்கியது.

இந்த சாலையில் 19 சிறுப்பாலங்கள் (கல்வெட்டு) அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்ப்பார்வையில் புறவழிச்சாலையில் தார்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுகிறது. மேலும் நாகை சாலையில் புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் ரவுண்டனா அமைக்கும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது. புறவழிச்சாலை பணி 80 சதவிதம் முடிந்துவிட்ட நிலையில் மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெறும் புறவழிச்சாலை பணியை நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் இளம்வழுதி,உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, இளநிலை பொறியாளர் இரவி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்ததும், திருத்துறைப்பூண்டியில் ஏற்ப்படும் போக்குவரத்துக் நெரிசல் 50 சதவீதம் குறையும் என்பது குறிப்பிடதக்கது.

The post திருத்துறைப்பூண்டியில் ரூ.20.40 கோடியில் புறவழிச்சாலை பணி விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruthurapundi ,Thirutharapoondi ,Tiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் சனி பிரதோஷ விழா