தொண்டி, ஏப்.13: தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கொடி மரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொண்டி ஸ்ரீதேவி பூமாதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோவில் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசிதி பெற்ற கோயிலாகும். இங்குள்ள சாமி சிலைகள் சுமார் 8 அடி உயரம் உள்ளது. இதுபோன்ற சிலைகள் இப்பகுதி கோயிலில் இல்லை என்பது குறிப்பிட தக்கது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயில் கடந்த 2017ம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் உட்புறம் கருடர் சன்னதி பின்புறம் கொடி மரம் வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன் சுமார் 3 லட்சம் மதிப்பில் கொடி மரம் அமைப்பதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
புராதான கால கோயில் என்பதால் கோவிலுக்கு சொந்தமாக பல நூறு ஏக்கர் நிலங்கள் இருந்ததாகவும் அவற்றில் பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் தெரிகிறது. கோயிலை சுற்றிலும் உள்ள இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கோயிலுக்கு அருகில் செயல் பட்டு வந்த மீன் மார்கெட் தற்போது செயல்படாததால் அந்த இடம் கால யாக உள்ளது. அதில் பக்தர்கள் நலன் கருதி அன்னதான கூடம் கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியது, சுற்று வட்டாரத்தில் இந்த பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் தினமும் இங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆனால் அமர்ந்து சாப்பிட இடம் இல்லாததால் கோயில் வளாகத்தில் அமர்ந்து சாப்பிடுவதால் சிரமம் ஏற்படுகிறது. அதனால் அன்னதான கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post தொண்டி பெருமாள் கோயிலில் கொடி மரம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.