×

தஞ்சாவூர் அருகே வினோதம் கைது செய்ய வந்த எஸ்.ஐ.க்களின் கைகளை கடித்து குதறிய குற்றவாளி: பீதியில் ஹெல்மெட் அணிவித்து கைது செய்த போலீஸ்

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் அருகே போலீசாரின் கையை கடித்த குற்றவாளியின் தலையில் ஹெல்மெட் அணிவித்து கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தமிழரசன் (28). இவர், தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைவாசம் முடிந்து கடந்த 10 நாட்களுக்கு முன் தமிழரசன் வெளியே வந்தார். இந்நிலையில், குடிபோதையில் சாக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக மீண்டும் புகார் வந்தது. இதனால் இவர் மீது நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து தேடிவந்தனர். கும்பகோணம் கோர்ட் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது.

அதன்பேரில், நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, எஸ்ஐ ஈஸ்வரன், எஸ்எஸ்ஐ கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சாக்கோட்டை கடைவீதியில் ரகளையில் ஈடுபட்டிருந்த தமிழரசனை நேற்று கைது செய்ய சுற்றி வளைத்தனர்.
அப்போது, எஸ்ஐ ஈஸ்வரன், எஸ்எஸ்ஐ கோவிந்தராஜ் ஆகியோரின் வலது கையை கடித்து விட்டு தமிழரசன் தப்ப முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார், மீண்டும் யாரையும் தமிழரசன் கடித்து விடாமல் இருக்க அருகில் இருந்த ஒருவரின் ஹெல்மெட்டை வாங்கி அவர் தலையில் அணிவித்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post தஞ்சாவூர் அருகே வினோதம் கைது செய்ய வந்த எஸ்.ஐ.க்களின் கைகளை கடித்து குதறிய குற்றவாளி: பீதியில் ஹெல்மெட் அணிவித்து கைது செய்த போலீஸ் appeared first on Dinakaran.

Tags : SIs ,Vinodham ,Thanjavur ,Thiruvidaimarudur ,Chakota, Thanjavur district ,Vinotham ,Dinakaran ,
× RELATED பீகாரின் சரண் தொகுதியில் விநோதம் லாலு...