×

கேக் வெட்ட வீட்டில் பெற்றோர் ஏற்பாடு பிறந்தநாளில் சிறுவன் ஏரியில் மூழ்கி பலி-செய்யாறு அருகே சோகம்

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி கீதா. இந்த தம்பதியரின் மகன் இளமாறன்(8) அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். மகள் ரித்திகா(6) 1ம் வகுப்பு படிக்கிறார்.இந்நிலையில், சிறுவன் இளமாறனுக்கு நேற்று முன்தினம் 8வது பிறந்தநாள் வந்தது. இதனால் இளமாறன் பள்ளிக்கு புதிய ஆடைகளை அணிந்து சென்றார். பின்னர், மாலை வீடு திரும்பியதும் இளமாறன் கடைக்கு சென்று கேக் வாங்கி வரும்படி தனது தாயிடம் கூறிவிட்டு விளையாட சென்றுள்ளார்.

பின்னர் அவரது பெற்றோர் சென்று கடையில் கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் இளமாறன் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இளமாறனின் பெற்றோர் தூசி பெரியார் நகர் பகுதியில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்றிருக்கலாம் என நினைத்து அங்கு சென்றபோது அங்கும் இளமாறன் செல்லவில்லை என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் நேற்று முன்தினம் இரவு தூசி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளமாறனை தேடி வந்தனர். அப்போது இளமாறன் வீட்டின் அருகே உள்ள குளம் மற்றும் ஏரியில் தவறி விழுந்திருப்பானோ என சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து நேற்று காலை செய்யாறு தீயணைப்பு படையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் விரைந்து வந்த செய்யாறு தீயணைப்பு படை வீரர்கள் குளத்திலும், ஏரியிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று காலை 8.30 மணி அளவில் இளமாறன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டான். இதைப்பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், தூசி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூசி ஏரியில் நேற்று முன்தினம் மாலை சிலர் மீன்பிடித்ததாக கூறப்படுகிறது இதையறிந்த இளமாறன் அங்கு வேடிக்கை பார்க்க சென்று இருக்கலாம் எனவும், அப்போது அவர் ஏரியில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிய வந்தது. பிறந்த நாளில் கேக் வெட்ட பெற்றோர் ஏற்பாடுகளை செய்த நிலையில், சிறுவன் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கேக் வெட்ட வீட்டில் பெற்றோர் ஏற்பாடு பிறந்தநாளில் சிறுவன் ஏரியில் மூழ்கி பலி-செய்யாறு அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Pali-Seyyar ,Cheyyar ,Arikrishnan ,Thusi village ,Vembakkam taluk ,Cheyyar, Thiruvannamalai district ,
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...