திருவண்ணாமலை, ஏப்.12: திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக 19 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 17ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. அதையொட்டி, நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காரீப், சம்பா மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெற 3ம் கட்டமாக 3 தாலுகாக்களில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 17ம் தேதி முதல் செயல்படும். அதையொட்டி, ஆன்லைனில் முன்பதிவு நாளை தொடங்குகிறது. அதன்படி செய்யாறு தாலுகாவில் நாவல்பாக்கம், பாப்பந்தாங்கல், காழியூர், அளத்துறை, முளகிரிப்பட்டு, உக்கல், வெம்பாக்கம் தாலுகாவில் குத்தனூர், சிறுநாவல்பட்டு, சிறுவஞ்சிப்பட்டு, சேணிநல்லூர், வந்தவாசி தாலுகாவில் கொவளை, இரும்பேடு, தெள்ளாறு, மலையூர், தென்னந்தூர், பெரணமல்லூர், செங்கம்பூணடி கூட்டுசாலை, வல்லம் மற்றும் மேல்சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.
நடப்பு ஆண்டில் (2022-23) சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ₹2,160, இதர ரகங்களுக்கு ₹2,115 விலை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றும் பெற வேண்டும். உரிய சான்றுகளுடன் ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேரில் அளிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், ஆன்லைனில் பதிவு செய்யப்படும். அதற்கான குறுஞ்செய்தி சம்பந்தப்பட்ட விவசாயி அளிக்கும் செல்போன் எண்ணுக்கு வரும். தொடர்ந்து, ஒதுக்கீடு செய்யப்படும் நாளில் நேரில் சென்று நெல் விற்பனை செய்யலாம்.
ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஏதேனும் உதவிகள் தேவை பட்டால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை 9487262555, 9445245932 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
The post (தி.மலை) கூடுதலாக 19 இடங்களில் நேரடில் நெல் கொள்முதல் நிலையம்
திருவண்ணாமலை கலெக்டர் தகவல்
நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு appeared first on Dinakaran.