×

குடிபோதையில் கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பெயின்டர் பலி: திருவாலங்காடு போலீசார் விசாரணை

திருத்தணி: குடிபோதையில் கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பெயின்டர் உயிரிழந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள தொழுதாவூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரங்கன் என்பவரின் மகன் திலீப் (37). இவர் பெயின்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அதே கிராமத்தில் மணி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அருகே தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து திலீப் மது அருந்திவிட்டு கிணற்றில் குளித்தார். அப்போது நீரில் மூழ்கிய திலீப் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து ஊர் மக்களுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதற்குள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திலீப் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு பேரம்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்தனர். 2 மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து திலீப்பின் உடலை மீட்டு திருவாலங்காடு போலீசாரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குடிபோதையில் கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பெயின்டர் பலி: திருவாலங்காடு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiruvalangadu ,Tiruthani ,Thiruvalangadu ,Thiruvallur… ,Thiruvalankadu ,
× RELATED விசிக பிரமுகருக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு