×

ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ஆளுநர்..கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!!

சென்னை : 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியதும் , தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் பேசிய அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், அரசியல் கட்சியின் கண்ணோட்டத்தில் ஆளுநர் செயல்படுவதால் அவருக்கு எதிராக 2வது முறையாக தீர்மானம் முன்மொழிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்; அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு மக்களும் நண்பராக இருக்கத் தயாராக இல்லை என்று பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது.

ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கீடாதவராக இருக்க வேண்டும் என அம்பேத்கர் குறிப்பிட்டு இருக்கிறார்; ஆளுநர் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும்; அரசியல் கட்சிக்கு அல்ல, என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில், ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி; பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரது ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.

ஆளுநர் கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை; ஆனால் சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர ஆளுநர் நினைத்தால் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம்.ஆளுநருக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என நான் கூற மாட்டேன்; ஆனால், அவரது அரசியல் விஸ்வாசம், அரசியல் சட்ட விஸ்வாசத்தை விழுங்கிவிட்டது; அதனால்தான், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி அரசின் அமைச்சரவை கொள்கைகளை மீறி பொதுவெளியில் பேசுகிறார்.

ஆளுநர் பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியானது அல்ல; ஆளுநர் என்பதைத் தாண்டி அரசியல்வாதியாக செயல்படுகிறார்.பார்த்துப்பார்த்து உருவாக்கிய சட்டத்தை தன்னுடைய சுயவிருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களை சொன்னால், இதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு ஏமாந்தவர்கள் இருக்கும் மாநிலம் அல்ல,”என்றார்.

The post ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ஆளுநர்..கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Governor ,Rajbhavan ,Gaikati ,CM ,G.K. stalin ,Chennai ,Tamil ,Nadu ,Tamil Nadu Assembly ,Rajbhavana ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...