×

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மரக்காணம் மீனவர்களை தாக்கிய புதுவை மீனவர்கள்-மீனவ கிராமங்களில் பதற்றம்

மரக்காணம் : நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மரக்காணம் மீனவர்களை புதுவை மீனவர்கள் தாக்கியதால் மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த குப்பன் (48), சுந்தரமூர்த்தி (55), சக்திவேல் (40), சந்துரு (22) மற்றும் 15க்கும் மேற்பட்டோர் வழக்கம்போல் நேற்று அதிகாலை 3 மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கடற்கரையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் ஆழ்கடல் பகுதியில் காலை 6 மணிக்கு மீன்களைப் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்கள் மற்றொரு விசைப்படகில் அங்கு வந்தனர். அதிக அளவில் மீன்களை பிடித்ததை பார்த்த வீராம்பட்டினம் மீனவர்கள் ஆத்திரத்துடன் அவர்கள் விசைப்படகில் வைத்திருந்த
இரும்பு பைப்புகள் மரத்தடிகளை எடுத்து எதிர்பாராத விதமாக எக்கியர்குப்பம் மீனவர்களை சரமாரியாக தாக்கினர்.

அதிர்ச்சி அடைந்த எக்கியர்குப்பம் மீனவர்கள் கேள்வி எழுப்பியபோது, மீன்பிடி வலைகளை அறுத்துவிட்டதால் தான் உங்களை அடிக்கின்றோம். மீன்பிடி தடை காலத்தில் உங்களது விசைப்படகுகளை புதுவை துறைமுகத்தில் தான் நிறுத்த வேண்டும். அங்கு வந்தால் உதைப்போம் என கூறி மிரட்டி உள்ளனர். இதில் எக்கியர்குப்பத்தை சேர்ந்த மீனவர் சந்துரு படுகாயம் அடைந்தார். தகவலறிந்த எக்கியர்குப்பம் மீனவர்கள், மூன்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர்.

இச்சம்பவம் குறித்து எக்கியர்குப்பம் மீனவர்கள் மரக்காணம் காவல் நிலையம், மீன்வளத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் இல்லாததால் தான் புதுவை மாநில மீனவர்கள் தாக்குகின்றனர். எனவே மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். படுகாயம் அடைந்த சந்துரு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மரக்காணம் மீனவர்களை தாக்கிய புதுவை மீனவர்கள்-மீனவ கிராமங்களில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : New Fishers-Fishermen Villages ,Marakkanam ,Middle Sea ,New Fishermen ,Viluppuram District ,New Fishermen-Fishers-Fishermen Villages ,Marakkam Fishermen ,Dinakaran ,
× RELATED நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொழிலாளி சடலத்தை சாலையில் வைத்து மறியல்