×

தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி விவகாரம் ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு: பொதுமக்கள் தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேரிடம் அதிக வட்டி தருவதாக ரூ.2,438 கோடி மோசடி வழக்கில், தலைமறைவாக உள்ள ‘ஆருத்ரா’ இயக்குநர்கள் 5 பேரை தேடப்படும் குற்றவாளியாக பொருளதாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். அவர்கள் குறித்து தகவல் அளித்தால் தக்க சம்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘ஆருத்ரா’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்திற்கு திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், வேலூர், விருதுநகர், கடலூர் என மாநிலம் முழுவதும் 37 கிளைகள் உள்ளது. இந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர்.

அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் சுமார் ரூ.2,438 கோடி முதலீடு செய்தனர். பணம் கட்டிய பொதுமக்களுக்கு முதல் 2 மாதங்கள் சொன்னப்படி வட்டி கொடுத்தனர். ஆனால் அதன் பிறகு அவர்களுக்கு எந்த வித வட்டியும் கொடுக்கப்படவில்லை. இதனால் முதலீடு செய்த பொதுமக்கள் ஆருத்ரா நிதி நிறுவன அலுவலகங்களில் கட்டிய பணம் மற்றும் அதற்கான வட்டியை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த வழக்கு டிஜிபி உத்தரவுப்படி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திய போது, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நபர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி கொடுப்பதாக மோசடி செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள், ஏஜெண்டுகள் மீது மோசடி உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்ட்டது. பின்னர் மோசடி தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், அதன் இயக்குநர்கள் வீடுகள், ஏஜெண்டுகள் வீடுகள் என 57 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தலைமையில் சோதனை நடந்தது. அதில், ரூ.5.69 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள், ஏஜென்ட்களின் 120க்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.96 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் 97 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், இதுவரை நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்த 16 நபர்களில், பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், பாஜ முன்னாள் பிரமுகர் ஹரீஷ், பேச்சி முத்துராஜ்(எ)ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ், மாலதி 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ‘ஆருத்ரா’ நிதி நிறுவன உரிமையாளர் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜசேகர், கிழக்கு முப்பேர் பகுதியை சேர்ந்த உஷா, பூந்தமல்லி திருமால் நகரை சேர்ந்த தீபக் கோவிந்த் பிரசாத், சென்னை பூம்புகார் நகர், முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நாராயணி, செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபாளையம், ஸ்ரீ பாவானி நகரை சேர்ந்த ரூமேஷ்குமார் ஆகிய 5 பேர் இன்னும் போலீசாரிடம் சிக்காமல் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் தலைமறைவாக உள்ளனர்.

இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் பிரமுகர் ஹரீஷ் உள்ளிட்ட 11 பேரிடம் நடத்திய விசாரணையில், மோசடி செய்த பணத்தில் பெரும்பாலான பணம் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வழங்கி இருப்பது தெரியவந்தது. மேலும், பிரச்னைகளை வெளியே வராமல் தடுக்க கட்டப்பஞ்சாயத்து, தலைமறைவாக இருக்க அடைக்கலம் என பல கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆருத்ரா உரிமையாளர் ராஜசேகர் தனது மனைவியுடன் துபாயில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரை சிபிஐ மூலம் இண்டர் போல் போலீஸ் உதவியுடன் கைது செய்து சென்னைக்கு அழைத்து வர பொருதாளதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேநேரம், தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராஜசேகர், இயக்குநர்களான உஷா, தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, ரூமேஷ்குமார் ஆகியோர் குறித்து தகவல் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உறுதியான தகவல்களாக இருப்பின், ‘தக்க சன்மானம்’ வழங்கப்படும். 5 பேர் குறித்து தகவல் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தகவல் தெரிவிக்கலாம். நேரில் தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள், காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், காவலர் பயிற்சி கல்லூரி, அசோக் நகர் சென்னை என்ற முகவரியில் தெரிவிக்கலாம். ெதாலை பேசியில் தகவல் கொடுப்பவர்கள் 044-22504311 மற்றும் 044- 22504332 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி விவகாரம் ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு: பொதுமக்கள் தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Arudra ,Nidhi ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...