சாத்தூர்: சாத்தூர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 2 மாதங்களில் இத்திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படத் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, தமிழ்நாடு அரசு ரூ.444 கோடி ஒதுக்கீடு செய்து, , புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்தது.
அறிவிப்பு வெளியானதும் உடனடியாக தாமிரபரணி கூட்டு குடிநீர் பணிகள் துவக்கப்பட்டன. முதற்கட்டமாக திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து, அதன் பின் அங்கிருந்து சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகருக்கு பம்பிங் செய்து கொண்டு செல்ல சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி பகுதியில் பெரிய அளவில் தரை தள தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.திருநெல்வேலியில் இருந்து சாத்தூர் வரை இத்திட்டத்திற்கான ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துள்ளன. தற்போது தரை தள தொட்டிகளில் இருந்து தண்ணீரை பம்ப் செய்வதற்கு சக்தி வாய்ந்த மோட்டார்கள் பொருத்தும் பணிகள் மற்றும் மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகையில், ‘‘சில வாரங்களில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடும். இன்னும் 2 மாதங்களில் இத்திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் நகராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன’’ என்று தெரிவித்தனர்.
The post சாத்தூர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் விறுவிறு: 2 மாதங்களில் செயல்படும் என தகவல் appeared first on Dinakaran.