×

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி அடித்துக்கொலை: சரணடைந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் சந்தைப்பேட்டை வனப்பகுதியில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாரண்டஅள்ளி சி.எம்.புதூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தினேஷ்குமார்(28), கோவிந்தன் மகன் குணாளன்(20) ஆகியோர் பென்னாகரம் கோர்ட்டில் சரணடைந்தனர்.

ஏரியூர் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவரை தாங்கள் தான் கொன்று வீசியதாக தெரிவித்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஓசூர் கெலவரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(45) என்பது தெரிய வந்தது. ஓசூர் அசோக் லேலண்ட் கம்பெனியில் பணியாற்றி வந்த சசிகுமார், மாயமானது குறித்து அவரது மனைவி சுஜாதா (40) ஓசூர் அட்கோ போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், சுஜாதாவை வரவழைத்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை காண்பித்தனர். இதில், கொலை செய்யப்பட்டது தனது கணவர் சசிகுமார் தான் என்பதை உறுதிபடுத்தினார்.

இதனைத்தொடர்ந்து சரணடைந்த தினேஷ்குமார் போலீசாரிடம் கூறியதாவது: எனது தந்தை கோவிந்தராஜ், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது சசிகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. செய்வினை வைப்பது, எடுப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்ட வந்த சசிகுமார், அவ்வப்போது எங்களது வீட்டிற்கு வந்து செல்வார். இதனால், அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, நான் ஒரு பெண்ணை காதலித்து வருவது குறித்து சசிகுமாரிடம் தெரிவித்து, மந்திரம் செய்து எங்களை இணைத்து வைக்க வேண்டும் கேட்டுக்கொண்டேன்.

இதனையடுத்து, அப்பெண்ணை அழைத்து வருமாறு கூறிய சசிகுமார், அவரை வசியம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதனால், சசிகுமாரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். இதுகுறித்து நண்பர்களான குணாளன், சந்தீப் ஆகியோரிடம் தெரிவித்தேன். இதையடுத்து, ஒருவருக்கு செய்வினை வைக்க வேண்டியுள்ளதாக கூறி பென்னாகரம் வனப்பகுதிக்கு சசிகுமாரை வரவழைத்தோம்.

அங்கு, வந்த அவரை கல்லால் சரமாரியாக தாக்கி கொலை செய்தோம். ஆனாலும், ஆத்திரம் தீராததால் மர்ம உறுப்பை துண்டித்து உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பினோம். போலீசார் தேடுவதை அறிந்து சரணடைந்தோம். இவ்வாறு தினேஷ்குமார் கூறினார். இதையடுத்து, இரண்டு பேரையும் தர்மபுரி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி பிரவீனா விசாரித்து 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதன்பேரில், இருவரும் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து தலைமறைவான சந்தீப்பை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். அவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.கைதான 3பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி அடித்துக்கொலை: சரணடைந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Pennagaram ,Ariyur market ,Dharmapuri district ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...