×

புதிதாக பேருந்து நிலையம் அமைக்க இடம் அளவீடும் பணி தீவிரம்

குன்றத்தூர்: மாங்காட்டில் மிகவும் தொன்மையானதும், பிரசித்தி பெற்றதுமான காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினந்தோறும் சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, கோயில் நகரமான மாங்காட்டில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வகையில், அடிப்படை வசதிகளுடன் கூடிய, பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் புதிதாக பேருந்து நிலையம் அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் முதல் கட்டமாக, மாங்காட்டில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாங்காடு காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் மாங்காடு பிரதான சாலையில் இருப்பதால், தற்போது அந்த இடத்தை அளவீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

அந்த பகுதியில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி இருப்பதால், அதனை ராட்சத, மோட்டார்கள் கொண்டு தண்ணீரை அகற்றி இடத்தை அளவீடு செய்யும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளில், மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன், துணை தலைவர் ஜபருல்லா, மாங்காடு நகராட்சி ஆணையர் சுமா மற்றும் மாங்காடு கோயில் நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போது சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் அளவீடு செய்து பேருந்து நிலையம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்பது குறித்து அளவீடு செய்து வருகின்றனர்.

முதல் கட்டமாக இடம் சுத்தம் செய்த பிறகு, பேருந்து நிலையம் அமைத்து, கடைகளும் கட்டுவதற்கான வரைபடங்கள் தயார் செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாங்காட்டில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடத்தை அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதிதாக பேருந்து நிலையம் அமைக்க இடம் அளவீடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kuntharathur ,Kamadsiyamman Temple ,Mangat ,Ikhoil ,Chennai ,Kanchipuram ,Chengalpadu ,
× RELATED சின்னத்தை மாற்றிக் கூறி வாக்கு...