×

காதலியை வசியம் செய்து அபகரித்த மந்திரவாதி கொலை: நண்பருடன் வாலிபர் சரண்

பென்னாகரம்: காதலியை வசியம் செய்து அபகரித்ததால் மந்திரவாதியை கொன்ற வாலிபர் நண்பருடன் சரணடைந்தார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் சந்தைப்பேட்டை வனப்பகுதியில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கெலவரப்பள்ளியைச் சேர்ந்த சசிகுமார்(45) என்றும், ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் திடீரென மாயமானதாக மனைவி சுஜாதா(40) ஓசூர் அட்கோ போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து சுஜாதா வந்து பார்த்து இறந்தது தனது கணவர் சசிகுமார்தான் என உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், நேற்று மாரண்டஅள்ளி சி.எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(28), குணாளன்(20) ஆகியோர் சரணடைந்ததனர். இதில் தினேஷ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனது தந்தை கோவிந்தராஜ், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது சசிகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. செய்வினை வைப்பது, எடுப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டு வந்த சசிகுமார், அவ்வப்போது எங்களது வீட்டிற்கு வந்து செல்வார். இதனால், அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, நான் ஒரு பெண்ணை காதலித்து வருவது குறித்து அவரிடம் கூறி மந்திரம் செய்து எங்களை இணைத்து வைக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அந்த பெண்ணை சசிகுமார் வசியம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, நண்பர்களான குணாளன், சந்தீப் ஆகியோரிடம் தெரிவித்தேன். பின்னர் ஒருவருக்கு செய்வினை வைக்க வேண்டும் என பென்னாகரம் வனப்பகுதிக்கு சசிகுமாரை வரவழைத்து கல்லால் சரமாரியாக தாக்கி கொலை செய்தோம். ஆத்திரம் தீராததால் மர்ம உறுப்பை துண்டித்து உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பினோம். போலீசார் தேடுவதை அறிந்து சரணடைந்தோம் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, இரண்டு பேரையும் தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து தலைமறைவான சந்தீப்பை நேற்று போலீசார் கைது செய்தனர்.

The post காதலியை வசியம் செய்து அபகரித்த மந்திரவாதி கொலை: நண்பருடன் வாலிபர் சரண் appeared first on Dinakaran.

Tags : Walibur Saran ,Pennagaram ,Darmapuri District ,Volliber Saran ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...