×

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜவை யாராலும் தோற்கடிக்க முடியாது: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று பிரதமர் மோடி பேசினார். பாஜவின் 44வது நிறுவன தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். நாடு முழுவதும் 10 லட்சம் இடங்களில் பிரதமர் மோடியின் பேச்சு நேரலையாக ஒளிபரப்பட்டது. இதை பா.ஜ தொண்டர்கள் திரண்டு கேட்டனர். சுமார் 50 நிமிடம் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் ஊழலை ஒழித்து, தேச பக்தியை உருவாக்க எனது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனது அரசுக்கு எதிராக பல்வேறு சவால்களை எதிர்க்கட்சியினர் முன்னெடுத்து வருகிறார்கள். வெறுப்பு நிறைந்த இவர்கள், தொடர்ச்சியாக பொய் பேசுகிறார்கள். தங்கள் ஊழல் செயல்கள் அம்பலமாகி நிம்மதியிழந்து விரக்தியடைந்துள்ளனர். இனி ஒரே ஒரு வழியைத்தான் பார்க்க முடிகிறது.

மோடிக்கு கல்லறை தோண்ட வேண்டியது தான் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள். உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்தாலும், அதற்காக நாம் மெத்தனமாக இருக்க வேண்டியதில்லை. 2024ல் பாஜவை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மக்கள் இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டனர். இது உண்மைதான். எனவே பாஜ தொண்டர்களாகிய நாம் ஒவ்வொரு குடிமக்களின் இதயத்தையும் வெல்லும் பணியை தொடங்க வேண்டும். நாம் வெற்றி வாக்கெடுப்பில் மட்டும் நின்றுவிடக் கூடாது. கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வெல்வதே நமது இலக்கு. ஜனசங்க காலத்தில் இருந்து நாம் எவ்வளவு கடினமாக உழைத்தோமோ அதையே ஒவ்வொரு காலத்திலும் செய்ய வேண்டும்.

ஆங்கிலேயர்கள் 1947ல் வெளியேறியிருக்கலாம். ஆனால் அவர்கள் சிலரின் மனதில் மக்களை அடிமைகளாக நடத்தும் விதைகளை விட்டுச் சென்றனர். அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாகக் கருதி அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் பா.ஜவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜவை யாராலும் தோற்கடிக்க முடியாது: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,2024 Lok Sabha elections ,PM Modi ,New Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED 2024 மக்களவைத் தேர்தல்.. அரசின்...