×

பூதப்பாண்டி அருகே குளத்தில் சடலமாக மிதந்த ரேஷன் கடை ஊழியர்

பூதப்பாண்டி, மார்ச் 26: பூதப்பாண்டி அருகே ரேஷன்கடை ஊழியர் குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூதப்பாண்டியை அடுத்த கடுக்கரை முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (39). இவருக்கு திருமணமாகி முத்துமாரி என்ற மனைவியும், 7 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். ராஜேஷ் வெண்டலிக்கோடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஷ் நீண்டநேரமாக  வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் ராஜேசை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 8மணியளவில் கடுக்கரை சீமாட்டி குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் சடலமாக மிதந்தது ராஜேஷ் என்பது தெரியவந்தது. அவர் குடிபோதையில் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags : Bhootapandi ,
× RELATED பூதப்பாண்டி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்