×

பதவி உயர்வு வழங்க கோரி தமிழ்மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் ஆரப்பாட்டம்

நாகப்பட்டினம்: பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுத விஜயரங்கன் தலைமை வகித்தார். தாசில்தார், துணை தாசில்தார் சங்க மாநில தலைவர் குமார் முன்னிலை வைத்தார்.

மாநிலத் தலைவர் சிவக்குமார், சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் மகேந்திரன் ஆகியோர் பேசினார். வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரைப்படி வருவாய் துறையை சிறப்பு துறையாக அறிவித்து மேம்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர், முதுநிலை பட்டியல் குளறுபடிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வருவாய் நிர்வாக ஆணையர் சரி செய்ய வேண்டும்.

தேர்தல் பிரிவில் தேர்தல் பணியாற்றும் தற்காலிக கணினி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை 4 ஆண்டுகளுக்கும் உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பொருளாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.

Tags : Tamil State Revenue Department Officers' Association ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை