×

தமிழ் கனவு நிகழ்ச்சி

சேலம், மார்ச் 16: சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த மாதம் 23ம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி மாசிநாயக்கன்பட்டியில் நடந்தது. இதில், மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக நாளை (17ம் தேதி) காலை 10 மணிக்கு தலைவாசல் பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் “சமத்துவம் தமிழென்று சங்கே முழங்கு” என்ற தலைப்பில் காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வனும், “கவிதைப் பெண்கள்” என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசுகின்றனர். எனவே, இந்நிகழ்ச்சியில் சேலம்  மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா