கரூர்: கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் உட்பட அதனை சுற்றிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் கடலை மற்றும் சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பாசனம் தவிட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், கடம்பங்குறிச்சி, திருமுக்கூடலூர் ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றுப்பாசனமும், ராஜபுரம், அரவக்குறிச்சி, செட்டிப்பாளையம், சுக்காலியூர், புலியூர், மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் அமராவதி ஆற்றுப்பாசனத்திலும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டு ஆறுகளும் கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் இணைந்து ஒருங்கிணைந்த காவிரியாக மாயனூர் நோக்கிச் செல்கிறது. அந்த பகுதிகளில், வாழை, நெல் போன்றவை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம், தரகம்பட்டி, குருணிகுளத்துப்பட்டி, காணியாளம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் ஏரி, கிணறு பாசனத்திலும், வானம் பார்த்த பூமி பாசனம் என்ற அடிப்படையிலும் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில், இந்த பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் நிலக்கடலை சாகுபடி நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர். மாவட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பகுதிகளில் நிலக்கடலை, சின்ன வெங்காயம் போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.