×

திண்டுக்கல் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மார்ச் 31 கடைசி நாள் திண்டுக்கல், மார்ச் 14: திண்டுக்கல் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-2023ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.01.2022ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ் பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ் பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலை சான்று, தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் மார்ச் 31ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்க பெறும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Dindigul District ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்சம்...